”கலை” மனிதனின் வாழ்வியல் அங்கம்                     பேசாமல் பேசும் “ஓவியக்கலை”யின் மௌனமே மொழி                      வாணுலகும் வந்து இறங்கும் இந்த “நாடக மேடையில்”                        சிலையின் நுணுக்கமும் சிற்பியின் கைவண்ணமும் கலைக்கு அற்பணம்

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

சில்லு விளையாட்டு


தட்டையான சிறு சில்லை அரங்கத்தில் போட்டு, அதனைக் காலால் மிதித்து, அரங்கத்துக்கு வெளியே எத்தித்தள்ளி, அதனை மிதித்து விளையாடுவது சில்லு விளையாட்டு எனப்படும்.
உடைந்த மண்பாண்டத்து ஓட்டில் சுமார் மூன்று அங்குல அளவு விட்டமுள்ள சிறு ஓட்டினைச் சில்லு என்பர். சில்லு விளையாட்டு விளையாடும் அரங்கு தரையில் சில்லால் கோடு கிழித்து அமைக்கப்படும். விளையாடும் அரங்கிலிருந்து சுமார் 10 அடி தொலைவில் ஒரு உத்திக்கோடு வரையப்படும்.


1.   உத்திக் கோட்டிலிருந்து அரங்கின் முதல் கட்டத்தில் சில்லை எறிவர். எறியும் சில்லு அரங்கக் கோட்டில் படாமல் கிடக்க வேண்டும். கோட்டில் படக்கூடாது, கோட்டில் பட்டால் அடுத்தவர் ஆடுவார்.
2.  உத்திக் கோட்டிலிருந்து நொண்டி அடித்துக்கொண்டு சென்று அரங்கில் கிடக்கும் சில்லை அதேநொண்டிக் காலால் ஒரே தவ்வில் மிதித்துப் பின்னர் அதே காலால் சிலலை அரங்கிற்கு வெளியே எத்தி, ஒரே தவ்வில் அதே நொண்டிக் காலால் மிதித்தால் பழம். பிழை நேர்ந்தால் அந்த ஆட்டப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படுவார்.   எந்த ஆட்டப் பகுதியில் பிழை நேர்ந்ததோ அந்த ஆட்டப் பகுதியிலிருந்து அடுத்த ஆட்டமுறை வரும்போது ஆட்டத்தைத் தொடரலாம்.
3.   பழம் பெற்றால் அடுத்த கட்டத்தில் இதேப்போல் ஆட்டம். முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என வரிசை முறையில் சில்லு எறிந்து ஆடி முடித்தபின் மச்சு ஆட்டம்.

மச்சு ஆட்டம்




 

உத்தி கோட்டிலிருந்து அரங்கு வரையில் நொண்டி அடித்துக்கொண்டு சென்று, அரங்கின் முதல் கட்டத்தில் இரு கால்களையும் ஊன்றிக்கொண்டு நிற்பர். ஆடிய சில்லைத் தலையில் வைத்துக்கொண்டு தன் கண்களை தானே இரு கைகளாலும் பொத்திக்கொண்டு இரண்டு தப்படி வைத்ததும் சரியா, தப்பா என்று கேட்டுக்கொண்டே ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி நடந்து செல்வர். கோட்டை மிதித்திருந்தால் தப்பு, சரி என்றால் அடுத்த தப்பிகள்.
கடைசி கட்டத்தில் சரி என்றதும் தலையிலுள்ள சில்லைக்குனிந்து தரையில் போடவேண்டும். பிறகு கண்ணைக் திறந்துக்கொண்டு அந்தச் சில்லை மிதிக்க
வேண்டும். மிதிக்கும் இந்த இடத்தை மலை என்று கூறுவர். இங்கு நின்றுகொண்டு ஆனையா, பூனையா என்று கேட்டபர். மற்றவர் ஆனை என்று சொன்னால் ஆனை தன் கையால் தண்ணீரை உறிஞ்சித் தன் தலைக்கு மேல் கையை உயர்த்தி நீரை விசிறுவது போலச்சில்லை அரங்குக்கு வெளியே பின்பக்கமாக எறிந்துவிட்டுக் கட்டங்களில் நடந்துவந்து கட்டத்திலிருந்து தவ்வி மிதிக்க வேண்டும்.




சில்லை மிதித்து விட்டால் அரங்கின் ஓரத்தில் ஒரு கட்டம் போட்டு அதனைக் தன் மச்சு என்று வைத்துக்கொள்ளலாம். அடுத்த ஆட்டத்தில் நொண்டி அடித்துக்கொண்டு செல்லும்போது தன் மச்சில் தான் இரண்டு கால்களையும் ஊன்றிக்கொள்ளலாம். அதிக மச்சு கட்டியவர் வென்றவர் ஆவார்.

பூனை என்று மற்றவர் சொன்னால் குனிந்து சில்லை எறிந்து அவ்வாறே மிதிக்க வேண்டும். மேல்காலின் மேல் சில்லை வைத்துக்கொண்டு கண்ணைத்திறந்துகொண்டு நடத்தலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக